தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டது. தேரோட்டம் மே 1ம் தேதி நடைபெறுகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டிற்கான சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் செந்தில்குமார், ரெங்கராஜ், சிவாச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சித்திரை பெருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 17ம் தேதியும், அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா மே 1ம் தேதியும் நடைபெறுகிறது.
