×

ஹரியானா குற்றவாளிகளுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவு திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு

திருவண்ணாமலை, மார்ச் 1: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானாவை சேர்ந்த குற்றவாளிகளுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய இடங்களில் கடந்த 12ம் தேதி 4 ஏடிஎம்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ₹72.79 லட்சத்தை வெளி மாநில கும்பல் கொள்ளையடித்தது. அதி நவீன காஸ் வெல்டிங் இயந்திரங்களை பயன்படுத்தி இரண்டரை மணிநேரத்தில் 4 இடங்களில் கொள்ளையடித்துள்ளனர்.

இதுதொடர்பாக, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர். அப்போது கொள்ளைக்கான சதி திட்டத்தை தீட்டி செயல்படுத்திய ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(35), ஆசாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அதேபோல், கர்நாடக மாநிலம் கோலாரில் (கேஜிஎப்) ஒரு லாட்ஜில் கொள்ைள கும்பல் தங்கி கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், கொள்ளையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் குறித்த தகவல்களை பெறுவதற்காவும், பதுக்கியுள்ள ₹70 லட்சத்தை பறிமுதல் செய்வதற்காகவும் கொள்ளை கும்பலின் தலைவனான முகமது ஆரீப், ஆசாத் ஆகியோரை கடந்த 22ம் தேதி மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதியுடன் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கொள்ளைக்கான சதி திட்டம் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும், ஹரியானாவில் பதுக்கியுள்ள ₹70 லட்சம் குறித்த விபரமும் தெரியவந்தது. அந்த பணத்தை மீட்க தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

கோர்ட் அனுமதித்த 7 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையில் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று மீண்டும் கொள்ளை குற்றவாளிகளான முகமது ஆரீப், ஆசாத் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரின் முகத்தையும் கறுப்பு முகமூடியால் மூடி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் கவியரசன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் இருவரையும் வேனில் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Haryana Magistrate Court ,Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...