×

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு தேசிய அறிவியல் நாள் விருது

வல்லம்: தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு தேசிய அறிவியல் நாள் விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகளில் முன்னோடியாக பணியாற்றிய நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடந்த விழாவில் இந்திய அறிவுசார் அமைப்புகளில் சிறப்பான பங்களிப்பு செய்த மணிபால் உயர் கல்வி அகாடமி பேராசிரியர் எம்.எஸ். வலியதனுக்கு சாஸ்த்ரா - மகாமனா விருது, இயற்பியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் எஸ். ராமசாமிக்கு சாஸ்த்ரா - ஜி.என். ராமச்சந்திரன் விருது, உயிர் அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியர் சமீர் கே. மாஜிக்கு சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருது, வேதியியல் மற்றும் உலோக அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் எஸ். நடராஜன், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியர் டி. பிரதீப் ஆகிய இருவருக்கு சாஸ்த்ரா - சி.என்.ஆர். ராவ் விருதுகள் மற்றும் தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டு மடல் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன (பேப் மற்றும் ஓசாட் பிரிவு) தலைவர் சரண் குருமூர்த்தி வழங்கி பாராட்டி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நமது தேசத்தை உருவாக்க பாடுபட வேண்டும். இதற்காக இளைஞர்கள் தங்கள் முழு திறனையும் கொண்டு தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் மேலும், விருது பெற்றவர்களின் பாராட்டு மடலும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 10 பள்ளிகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வக சாதனங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, சிறந்த முனைவர் பட்ட ஆய்வறிக்கையை அளித்த மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழக (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) மாணவி ஷாலினி ராவத், பெங்களூரு ஜவஹர்லால் நேரு அறிவியல் உயராய்வு மைய மாணவி தீக்ஷா பாதி, கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) மாணவி சிர்ஷா சாகா ஆகியோருக்கு ஆகியோருக்கு சாஸ்த்ரா - சரோஜ் சந்திரசேகர் விருதுகளையும், தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசையும், பாராட்டு சான்றிதழையும் சரண் குருமூர்த்தி வழங்கினார். விழாவில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக டீன் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : National ,Day ,Sastra Neighboring University ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து