×

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 18ல் உண்ணாவிரத போராட்டம்

நீடாமங்கலம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நீடாமங்கலம் வட்டாரக் கிளையின் பொதுக்குழுக் கூட்டம் அரசு உதவி பெறும் இராமவிலாஸ் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் கவுசல்யா தலைமை வகித்தார். வட்டார பொருளாளர் கண்ணன் வரவேற்றார். மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் தமிழரசன் 5 கட்டப் போராட்டங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் வட்டாரச் செயலாளரால் வாசிக்கப்பட்ட வரவு செலவிற்கு ஏற்பளிக்கப்பட்டது.

மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்கள் படி 2009க்கு பின் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும். உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். நிறுத்தி வைத்துள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பிற்கான பணப்பயன் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்கிட வலியுறுத்தி நடைபெறவிருக்கும் 5 கட்டப் போராட்டங்களான பிப்ரவரி 28 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், மார்ச் 1 முதல் 5 வரை கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம், மார்ச் -18 ல் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம், ஏப்ரல் 8 - இல் மாநிலத் தலைநகரில் உண்ணாவிரதப் போராட்டம் மே 2- இல் மாநிலத் தலைநகரில் மறியல் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. முடிவில் வட்டாரத் துணைச் செயலாளர் சோழன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை