×

சாம்பல் புதன் நாளுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது 40 நாள் நோன்பு கடைபிடிப்பு

ராமநாதபுரம், பிப். 23: கிறிஸ்தவர்களின் தவக்காலம் என அழைக்கப்படும் 40 நாள் நோன்பு கடைபிடித்தல் சாம்பல் புதன் நாளுடன் நேற்று தொடங்கியது. இன்று முதல் துவங்கும் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இந்நாளை சாம்பல் புதனாக அனுஷ்டிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம், நேற்று சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது. ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுவாக தவக்காலம் நேற்று துவங்கி, 40 நாட்களுக்கு நீடிக்கும். இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நாட்களை இறை ஆர்வலர்கள், புனித நாட்களாக கருதுவர். இந்த தவக்காலத்தில் இறைவனை மனிதன் அதிகமாகவும், ஆழமாகவும் தேடும் காலமாக இருக்கும்.

இந்நாட்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும், இறைவனோடு தங்களை ஐக்கியப்படுத்தி கொள்ளவும் இந்த நோன்பு உதவியாக இருக்கும். தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மதுப்பழக்கம், புகை பிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தவக்காலம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளாக புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்.6ம் தேதி புனித வியாழன் அனுஷ்டிக்கப்பட உள்ளது. ஏப்.7 அன்று இயேசு சிலுவையில் அறையும் நாளான புனித வெள்ளி வருகிறது. அன்றிலிருந்து 3வது நாளில் வரும் இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகையை ஏப்.9ம் தேதி கிறிஸ்தவர்கள் கொண்டாட உள்ளனர்.

Tags : Lent ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி