×

கவுண்டம்பாளையம் அருகே மதுபோதையில் காருக்குள் தூங்கிய வங்கி மேலாளர்

பெ.நா.பாளையம், பிப்.22: கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட் அருகே உள்ள போலீஸ் செக்போஸ்ட் பகுதியில் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அங்கு அரசு விரைவு போக்குவரத்து கழகமும் உள்ளது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் கார் நின்று கொண்டிருந்ததால் செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போலீசார், அருகே சென்று கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது டிரைவர் சீட்டில் ஒருவர் படுத்திருப்பது தெரிந்தது. இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் அவர்களும் அங்கு வந்தனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் உள்ளே இருந்தவர் அசையாமல் படுத்திருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்தனர். அப்போதும் அந்த நபர் எழுந்திருக்கவில்லை. போலீசாரும் பொதுமக்களும் பயந்தபடி அவரின் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பியதில் லேசாக அசைந்து கண்ணை திறந்து பார்த்தவர் ‘‘நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கூலாக கேட்டார். அதன் பின் தான் அந்த நபர், மதுபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. விசாரணையில், அவர் சூலூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், சாய்பாபா காலனியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நிதி துறை மேலாளராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அதன்பின் அவருக்கு மது பரிசோதனை செய்த துடியலூர் போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காக அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Goundampalayam ,
× RELATED பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்...