திருப்பூர்,செப்.24: திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் ராயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான நைஜீரிய நாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்கள் திருப்பூரிலிருந்து பின்னலாடைகளை குறைந்த விலைக்கு வாங்கி நைஜீரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் காலாவதியான விசா மற்றும் பாஸ்போர்ட்டுடன் தங்கியிருப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அனில் குமார் தலைமையில் வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் ராயபுரம் பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நைஜீரியர்களைப் பிரித்து விசாரணை நடத்தினர். பைக்கில் வந்த 2 நைஜீரியர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை துரத்தி பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் ஒலிஷாக்சூ சுக்கூஸ் டேவின் (47), பியர்ரியூ மோசஸ் (47) என்பதும், இவர்கள் இருவரும் காலாவதியான பாஸ்போர்ட்டுடன், சட்டவிரோதமாக தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.