நாசரேத், செப். 20: தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26ம் தேதி சப்பர பவனி நடக்கிறது.
நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா, நேற்று முன்தினம் (18ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின் முதல் நாள் அன்று மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் கொடியேற்றினார். பங்குதந்தைகள் மணி, ரத்தினராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 26ம் தேதி (திங்கட்கிழமை) 9ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு ஆராதனை நடக்கிறது. இரவு 10 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் திருவுருவ சப்பர பவனி நடைபெறுகிறது. 27ம் தேதி (செவ்வாய்கிழமை) 10ம் திருவிழா காலை 6 மணிக்கு ஜெபமாலை, காலை 6.30 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு ஆடம்பரத் திருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை வகித்து ஆசியுரை வழங்குகிறார். காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல், காலை 11 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி, ஜோசப் ரவிபாலன் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை தைலாபுரம் பங்குதந்தை இருதயராஜா தலைமையில் விழா குழுவினர், இறைமக்கள், ஊர் பெரியவர்கள் செய்துள்ளனர்.