×

தா.பழூர் அருகே கதண்டுகள் கடித்து 6 பேர் காயம்

தா.பழூர், ஆக.27: தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கதண்டுகள் கடித்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பலத்த காற்று வீசியதால் பள்ளியை சுற்றி உள்ள மரத்தில் இருந்த கதண்டுகள் பறக்க துவங்கியது. அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள் 2 பேர், கூட்டத்திற்கு வந்த பெற்றோர்கள் 2 பேர் மற்றும் சாலையில் சென்ற பெண், அவருடைய குழந்தை என 6 பேரை விஷவண்டுகள் கடித்தது. இதில் அனைவரும் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பள்ளியை சுற்றியும் சாலையிலும் கருவேல மரங்கள், பனை மரங்கள், புளியமரங்கள் உள்ளது. அவற்றில் பல மாதங்களாக கதண்டுகள் இருந்து வருகின்றது. அவ்வப்போது காற்றின் காரணமாக மற்றும் அதிக வெளிச்சம் காரணமாகவும் கதண்டுகள் பறந்து பொது மக்களை தாக்கி பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை அனைத்து அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாணவர்கள் உட்பட 6 பேரை கதண்டுகள் தாக்கி உள்ளன. இந்த கதண்டுகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் முன் அவற்றை அகற்றி மாணவர்கள் பயமின்றி பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tha.Papur. ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்