தா.பழூர், ஆக.26: தா.பழூர் அருகே மணல் கடத்திய 6 பேரை கைது செய்து 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ கோவிந்தபுத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் கலைச்செல்வி (46). இவருக்கு கீழகோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. \தகவலின்பேரில் விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் .அப்பொழுது கீழ கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதியிலிருந்து மேல கோவிந்தபுத்தூர் பகுதிக்கு வந்த 6 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தனர். அப்பொழுது 6 மாட்டு வண்டிகளிலும் அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த மேல கோவிந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோக்ராஜ் (46), முருகேசன் (41), வாசு (29), அறிவழகன் (27), பாக்யராஜ் (38), குமார் (44) ஆகிய 6 நபர்களையும் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
