அரியலூர், ஆக.26: சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கண் மருத்துவ உதவியாளர் ஷீலா கலந்து கொண்டு பார்வை குறைப்பாடு உடைய மாணவ, மாணவியர்களை கண் பரிசோதனை மூலம் கண்டறிந்து இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கினார். மேலும் பார்வை குறைப்பாட்டின் காரணமான கண்ணாடி அணியும் மாணவ மாணவிகள் கண்ணாடியை தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாவிட்டால் பார்வை திறன் குறைந்து விடும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கண்ணொளி காப்போம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை பத்மாவதி, உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி, ஆசிரியை கோகிலா ஆசிரியர்கள் ரமேஷ், தங்கபாண்டி, வீரபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.