×

தமிழ்மொழி இலக்கிய திறனறிதேர்வில் தேர்ச்சி பெற்றால் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1500

சென்னை, ஆக .6: தமிழக அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல், கணக்கு, சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போல தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவர்கள்  மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ. 1500 வீதம் இரண்டு  வருடங்களுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதம் உள்ள 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ்ப் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடக்கும். அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படும்.

2022-23ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ்  11ம் வகுப்பு படிக்கும்  மாணவர்களும் அக்டோபர் 1ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் 22ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேர்வுக் கட்டணமாக ரூ. 50 பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 9 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...