நெல்லை, ஜூலை 30: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவில், காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவம் நாளை (31ம் தேதி) மாலையில் நடக்கிறது. பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் ரதவீதி வலம் நடக்கிறது.
4ம் திருவிழாவான கடந்த 25ம் தேதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. இதில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் அம்பாளுக்கு வளையல் காணிக்கையாக வழங்கி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆடிப்பூரம் 10ம் திருநாளான (31ம் தேதி) நாளை இரவு 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி நவதானியங்கள், பலகாரங்களை கொண்டு அம்பாள் மடிநிரப்பி சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.