பந்தலூர், ஜூலை 30: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேரம்பாடி பஜாரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை சேரம்பாடி கோரஞ்சால் பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.இப்பகுதியில் யானை நடமாட்டங்கள் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் மதுபான பிரியர்கள் மது குடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களும் காட்டு யானைகளுக்கு பயந்து மதுபானம் கடையை அரசு குறிப்பிட்டுள்ள நேரம் வரை திறந்து விற்பனை செய்யாமல் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை மூடி விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள சில ஆட்டோ ஓட்டுநர்கள் மதுபான கடை ஊழியர்களுடன் இணக்கமான உறவுகளை ஏற்படுத்தி மதுபான பாட்டில்களை வாங்கி ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 50க்கு மேல் விலை அதிகமாக வைத்து இரவு நேரங்களில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், மதுபிரியர்கள் மதுபான கடைக்கு செல்லும்போது கடை மூடி இருப்பதால் அதிக விலை கொடுத்து ஆட்டோக்களில் சப்ளையாகும் மதுபானங்களை வாங்கி குடிப்பதால் பணம் விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக மது பிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள அப்பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையை மீண்டும் சேரம்பாடி பஜார் பகுதியில் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு குறிப்பிட்டுள்ள நேரம் இரவு 10 மணி வரை மதுக்கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதுபிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்திள்ளனர்.