குறிஞ்சிப்பாடி, ஜூலை 28: குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் நடந்தது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 51 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மறு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி ஆதர்ஷ் யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் நிலைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், சிவஞானசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்து, திட்டங்களை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கினர். மேலாளர்கள் சுகுமாரன், வெங்கடேசன் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் பலர் பங்கேற்றனர்.