புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவை கண்டித்து மின்துறையினர் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். மின்விநியோகம் பாதிக்காத வகையில் அதேவேளையில் அலுவலக பணிகள் முடங்கும் வகையில் ஒவ்வொரு மண்டலம் வாரியாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4ம் நாளாக தொடர்ந்து நடைபெற்றது. மண்டலம்-4 பிரிவில் (வில்லியனூர், பூமியான்பேட்டை, ராமநாதபுரம், திருக்கனூர், சேதராப்பட்டு, காலாப்பட்டு) பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அங்கு மின் கட்டணம் அளவீடு, வசூல், பரா
மரிப்பு பணிகள் பாதித்தன. பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே மின்துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் சார்பில் சோனாம்பாளையம் சந்திப்பு வாட்டர் டேங்க் அருகிலிருந்து பேரணியாக சென்று மின்துறை நுழைவு வாயில் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி முருகன் கண்டன உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிஐடியு சீனுவாசன் உள்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மின்துறை போராட்டக் குழுவினரை மார்க்சிஸ்ட் பிரதேச செயலாளர் ராஜாங்கம், விவசாயிகள் சங்கம் சங்கர், சிஐடியு நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கண்டன உரையாற்றினர்.