திண்டுக்கல், மே 25: திண்டுக்கல்லில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணை செயலாளர் கமல் குமார் தலைமை வகிக்க, மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி சரவணன், செயலாளர் பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலீபன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் பேசுகையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் விதமாக பல்வேறு சதி வேலைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வங்கிகளில் எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது கண்டிக்கத்தக்கது. மேலும் ரயில்வே, பாலிடெக்னிக், அஞ்சல் துறை, என்எல்சி உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர் அதிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றார். இதில் மாவட்ட செயலாளர் ஆனந்த முனிராசன், மண்டல தலைவர் நாகராஜன், காஞ்சிதுறை உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.