கோவில்பட்டி, மே 12: கோவில்பட்டி யூனியன் துணை சேர்மனும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான பழனிசாமி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பெருமாள்சாமி, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் மனோகரன், ஆறுமுகச்சாமி, அங்குசாமி, கோதண்டராமன், செல்லச்சாமி ஆகியோர் கோவில்பட்டி தாசில்தார் சுசிலாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி தாலுகா பாண்டவர்மங்கலத்தில் அரசு நிலத்தில் ஊரணி உள்ளது. இதனை சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் ஊரணியில்தான் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வாறுகால் அமைத்து பிரதான கழிவுநீர் வாறுகாலில் இணைத்தால் ஊரணியை பாதுகாக்க முடியும். மேலும் மழை காலத்திற்குள் ஊரணியை சுத்தப்படுத்தி மழைநீரை சேமித்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எனவே ஊரணிக்கு வரும் கழிவுநீரை தடுத்து வாறுகால் அமைக்கவும், ஊரணியை சுத்தம் செய்யவும் ஊராட்சி ஒன்றியம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே ஊரணியை சர்வேயர் மூலம் அளவீடு செய்து 4 பக்க எல்லைகள் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.