சென்னை: உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை அடிப்படையில் நீலக்கொடி சான்று திட்டத்தில் மெரினா, அறந்தாங்கியில் உள்ள கடற்கரைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மானிய கோரிக்ைக மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழகத்தில் 1076 கி.மீ., கடற்கரை உள்ளது. இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த திட்டத்துக்கு நீலகொடி சான்று பெறுவதற்காக சர்வதேச தரத்தில் அந்த கடற்கரைகளை மேம்படுத்துவதற்காக, கடற்கரையின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இன்று முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளார். அதில் இந்த ஆண்டு 2 கடற்கரைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த கோரிக்கை அடிப்படையில், மெரினா கடற்கரையும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் உள்ள கடற்கரையும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கடற்கரைகளை தலா ரூ.10 கோடியில் மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.