சென்னை: கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் எலீசா (45), திருமணமாகாதவர். இவர், கேளம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அப்போது, கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாமுவேலுடன் (38) பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாமுவேல் அடிக்கடி பணம் கேட்பதாலும், மது அருந்தும் பழக்கம் உள்ளதாலும் கடந்த 2 வாரங்களாக அவரை சந்திப்பதை எலீசா தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல், நேற்று மாலை பள்ளி விட்டதும் எலீசாவை சந்திக்க சென்றார். பள்ளியில் இருந்து வெளியே வந்த ஆசிரியை எலீசா அவரை சந்திப்பதை தவிர்த்து, மாற்றுப்பாதையில் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதை அறிந்த சாமுவேல், தனது வாகனத்தில் வேகமாக சென்று அவரை வழிமறித்து, தன்னிடம் பேசாமல் தவிர்ப்பது ஏன், என்று கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சாமுவேல் ஆசிரியை எலீசாவை சரமாரியாக தாக்கி செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், கேளம்பாக்கம் போலீசார் வழிமறித்து தகராறில் ஈடுபடுதல், தாக்குதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், சாமுவேல் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். இவர், பாஜகவில் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.