கோவை, ஏப்.20: கோவை இருகூரை சேர்ந்தவர் சிவகணேஷ் (40). சிஎன்சி லேத் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடந்த 4 நாளுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றிருந்தார். நேற்று முன் தினம் கோவை திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகையை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து சிவகணேஷ் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிவ கணேஷ் சில நாடகளுக்கு முன் தனது வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகையை கடன் பிரச்னையால் அடகு கடையில் அடமானம் வைத்து விட்டார். குடும்பத்தினருக்கு தங்க நகை தேவையாக இருந்ததால் மீதமுள்ள நகையை அவர் அடமானம் வைக்கவில்லை.
வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு சென்னை சென்றுள்ளார். மீண்டும் இவர் வீட்டிற்கு வரும் முன் திருடர்கள் கதவு பூட்டை உடைத்து திருடி விட்டனர். வீட்டில் ஆளில்லை என நோட்டம் விட்டு கண்டறிந்து திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பதாக தெரிகிறது. போலீசார் அந்த வீதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.