சூலூர், ஏப்.12: சூலூர் அருகே விற்பனைக்காக 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழக போலீசார் கஞ்சா வேட்டை ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் தொடர் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சூலூரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தொடர் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று தென்னம்பாளையம் நான்கு ரோடு அருகே துணை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வடமாநில வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அவரைப் பிடித்து விசாரித்தபோது கஞ்சா பொட்டலங்களை தனது பேன்ட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சூலூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சங்கர் டிகால் (27) என்பதும், வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அரசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது, அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.