வலங்கைமான், ஏப். 11: கடந்த அதிமுக ஆட்சியில் அவசரகதியில் வலங்கைமான் பேரூராட்சியில் அமைத்த நாள் முதல் எரியாமல் உள்ள சூரிய மின்தகடு விளக்கினை சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சூரிய ஒளியில் மின்னேற்றம் பெற்று இரவில் ஒளிரும் மின்கம்பங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் சில மாதங்களுக்கு முன்னர் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அவை கோல்டன் சிட்டி கம்பி கார சந்து வாதம்ஸ் கார்டன் மற்றும் குடமுருட்டி வழி நடப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது. அதில் 11வது வார்டு குடமுருட்டி வழிநடப்பு படித்துறை அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இறந்தோருக்கு திதி கொடுக்கும் மண்டபம் அருகே உள்ள மின்கம்பத்தில் உள்ள விளக்குகள் அது அமைக்கப்பட்ட நாளில் இருந்தே எரியவில்லை. வெறும் காட்சிப் பொருளாக உள்ள சோலார் மின் விளக்கினை உடனடியாக சரி செய்து தர பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.