×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர் ஆஜர்

மதுரை, ஏப். 9: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர் ஐகோர்ட் கிளையில் ஆஜரானார். மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் காளிகாப்பன் முதல் பிட் பகுதியில் பாட்டை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலை என வருவாய் ஆவணங்களில் உள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து குடியிருக்கின்றனர். இந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை பிறருக்கு வழங்க முடியாது. எனவே, பட்டா வழங்க தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு பகுதியில் நிலம் வழங்கி, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த நிலத்திற்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி வரன்முறை செய்திட ஏதுவாக சாலை என்பதை வகை மாற்றம் செய்து கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் மதுரை கலெக்டர் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் ஆஜரானார்.கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, நீதிமன்ற வழக்கிற்கு முன்பே கடந்த ஆக.30க்கு முன் கெஜட்டில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இது நீதிமன்ற அவமதிப்பின் கீழான நடவடிக்கை இல்லை என்றார்.மனுதாரர் வக்கீல் பாமலின் ஆஜராகி, அதிகாரத்தை மீறி வகை மாற்றம் செய்யபட்டு, பட்டா வழங்கியுள்ளனர் என்றார். இதையடுத்து அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்.26க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Madurai Collector Azhar ,
× RELATED கோவை மேட்டுப்பாளையம் ரோடு...