மஞ்சூர், ஏப்.9:நீலகிரி மாவட்டம் குந்தா வருவாய்துறை சார்பில் வீடில்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து கணினி பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மஞ்சூர் அருகே தமிழக கேரளா எல்லையோர கிராமமான தணயகண்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினத்தை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு வருவாய்துறை சார்பில் ஏற்கனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கணினி பட்டாவாக மாற்றி வழங்குவது தொடர்பாக ஊட்டி ஆர்.டி.ஓ.துரைசாமி தணயகண்டி கிராமத்திற்கு சென்று நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது குந்தா தாசில்தார் சீனிவாசன், வட்ட துணை நில அளவையாளர் வினோத், வருவாய் ஆய்வாளர் வேடியப்பன் உள்ளிட்ட வருவாய்துறையினர் பங்கேற்றனர்.