×

கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி மாயமான தனியார் கல்லூரி மாணவனை, மீட்பு படையினர் சடலமாக மீட்டனர். குரோம்பேட்டை செந்தில் நகர், பாலகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவரது மனைவி ஹஸ்ரத்தம்மா. அதே பகுதியில் மாவு கடை வைத்துள்னர். இவர்களுக்கு கிஷோர் (25), ஹேமந்த்குமார் (23) ஆகிய மகன்கள் உள்ளனர். 2வது மகன் ஹேமந்த்குமார், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஹேமந்த்குமார், தனது நண்பர்களுடன் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கத்தில் 150 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். முடியவில்லை. ஹேமந்த்குமார், ஆழத்துக்கு இழுத்து செல்லப்பட்டார்.

தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு நிலைய மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்று, இரவு 9 மணிவரை ஹேமந்த்குமாரை தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் ஹேமந்த்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு, மாலை 4 மணியளவில், சடலமாக மீட்டனர். இதையடுத்து காயார் போலீசார், சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Calcutta ,
× RELATED மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை...