×

பரட்டை தலையுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சொந்த செலவில் முடிவெட்டிய திமுக ஊராட்சி தலைவர்: பொதுமக்கள் பாராட்டு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில், அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்தாண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த வீரா (எ) வீராசாமி, அரசு பள்ளிக்கு சென்று, அங்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அப்பள்ளி தொடர்ந்து மாவட்ட அளவில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வருவதை அறிந்து பாராட்டு தெரிவித்தார்.

அந்த நேரத்தில், பள்ளி மாணவர்கள் பலர் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல், பல்வேறு கோணங்களில் வெட்டி கொண்டு பள்ளிக்கு வந்ததை பார்த்த அவர், இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டார். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்களது ஒத்துழைப்பு இல்லாததால் மாணவர்கள் இதுபோல் வருவதாக வேதனையுடன் கூறினார். இதை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ெபற்றோரை அழைத்து பேசிய ஊராட்சி தலைவர் வீரா, பள்ளியில் படிக்கும் போதே ஒழுக்கத்துடன் வளர்த்தால்தான் அவர்கள் அரசு அதிகாரிகளாகவோ, பொது வாழ்க்கையிலோ வெற்றி பெற்று சாதனை புரிய முடியும். அதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என அறிவுறுத்தினார். மேலும், மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டி கொண்டு வர, உங்களது ஒத்துழைப்பு அவசியம் என ஆதரவை கேட்டார்.

பின்னர், பெற்றோர்களின் சம்மதத்துடன், பள்ளி வளாகத்திலேயே முடி திருத்தும் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு பல்வேறு டிசைன்களில் முடி வெட்டி இருந்த 300 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அங்கேயே சிகை அலங்காரம் செய்து வைத்தார். அதேபோன்று கை, கால் நகங்களும் வெட்டி சுத்தம் செய்யப்பட்டது. இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

Tags : Pimugha Prouracha ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32,571 பேர்...