மதுரை, மார்ச் 26: மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு இணை இயக்குநர் விவேகானந்தன் கூறுகையில், ‘‘மதுரை மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு சந்தைத்திட்டம் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இடைத்தரகர் இன்றி விற்பனை செய்து வருகின்றனர். இதில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதற்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 48 மணி நேரத்தில் வரவு வைக்கப்படுகிறது. வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் விரைவில் இத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான மின்னணு பரிவர்த்தனை திறன்மேம்பாட்டுப் பயிற்சியானது விற்பனைக்குழு உரிமம் பெற்ற வணிகர்களுக்கும், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கும், வேளாண் விற்பனை மற்றும் வணிக அலுவலர்களுக்கும், விரிவாக்க அலுவலர்களுக்கும் நடத்தப்பட்டுள்ளது.’’ என்றார். இதற்காக நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், விற்பனை மற்றும் வணிக இணை இயக்குநர் விஜயலெட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, துணை இயக்குநர் அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் மற்றும் வணிகர்கள் e-NAM திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி அறிவுறுத்தியுள்ளார்.