கோவை, மார்ச் 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை வகித்தார். துணை செயலாளர் கவிதா வரவேற்றார். இதில், திருப்பூர் நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்பனர் பணியிடங்களை, காலமுறைப்பணியிடங்களாக மாற்றி தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். அனைத்து ஆய்வக நுட்பனர்களையும் பழைய ஓய்வூதியத்தில் இணைத்திட வேண்டும்.
அரசு, ஈரோடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆய்வக நுட்பனர்களையும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இணைக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தலைமை ஆய்வக நுட்பனர் பதவியை உருவாக்க வேண்டும். ஆய்வக நுட்பனர் கவுன்சிலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.