×

ராசிபுரம் நகர்மன்ற தலைவராக கவிதா சங்கர் போட்டியின்றி தேர்வு

ராசிபுரம், மார்ச் 5: ராசிபுரம் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட கவிதா சங்கர், துணைத்தலைவர் கோமதி ஆனந்த் ஆகியோருக்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 24 வார்டுகளில் வெற்றி பெற்றது. ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 15வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா சங்கர், போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் கவிதா சங்கர் ஆகியோர் ஊர்வலமாக சென்றனர். கவிதா சங்கர், ராசிபுரம் நகராட்சியின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மதியம் நடந்த துணைத்தலைவருக்கான தேர்தலில் கோமதி ஆனந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜேஷ்குமார் எம்பி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வக்கீல் செல்வம், ராசிபுரம் சரவணன், முன்னாள் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், பாலச்சந்திரன், சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Kavita Shankar ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து