கம்பம், மார்ச் 3:கடந்த இரு நாட்களாக மஹா சிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் குலதெய்வ வழிபாட்டுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர். இதனால் கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்து இன்றி பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி கிடந்தன. தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய உழவர் சந்தையான கம்பம் உழவர் சந்தையில் தினசரி 40 டன் வரை காய்கறி விற்பனை ஆகும்.
கம்பத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள் தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கம்பம் உழவர் சந்தையில் காய்கறி கடை அமைத்தும், உழவர் சந்தையை சுற்றியும் கடைகள் அமைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கம்பம் உழவர் சந்தை காலை 5 மணி முதல் மாலை வரை படு பிஸியாக இருக்கும். கம்பத்தை ஒட்டி இருக்கக்கூடிய கேரளாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் காய்கறி தேவைகளுக்கு கம்பம் வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக குல தெய்வ வழிபாட்டுக்கு சென்ற வியாபாரிகளால் கம்பம் உழவர் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.