காரைக்குடி, பிப்.25: தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சிக்கு மக்களின் அளித்த சான்று உள்ளாட்சியில், மகத்தான வெற்றி என முன்னாள் அமைச்சர் தென்னவன் தெரிவித்தார்.
காரைக்குடியில் நடந்து முடிந்த நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 1வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கார்த்திகேயன், 30வது வார்டில் வெற்றி பெற்ற விஷ்ணுபெருமாள் ஆகியோர் முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலையில் திமுக.வில் இணைந்தனர்.
பின்னர் அவர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9 மாதங்களில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். முதல்வரின் திட்டங்கள் அனைத்து மக்களை நேரடியாக சென்றடைகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். இது முதல்வரின் நல்லாட்சிக்கு மக்கள் அளிக்கும் சான்றாகும்.
முதல்வரின் சாதனைகள் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. திமுக சொன்னால் அதனை நிச்சயம் நிறைவேற்றும் என முதல்வர் சூளுரைத்து அறிவித்த திட்டங்களை அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் மக்களின் நலனுக்கு சென்றுகொண்டிருக்கிறது. அதனுடைய பயனை மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார். கொள்கை கோட்பாடுகளை கொண்ட இயக்கம் திமுக. இதில் தங்களை இணைத்துக் கொண்ட சுயேட்சை வேட்பாளர்களை வரவேற்கிறோம் என்றார். வர்த்தக அணி கென்னடி, சிறுபான்மை அணி அன்னைமைக்கேல், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.