×

ரங்கோலி ஓவிய போட்டி திருவானைக்கோவில் பகுதியில் ருசிகர சம்பவம் கள்ள காதலியை வரவழைக்க கொலை நாடகம் அரங்கேற்றிய வாலிபர் கைது

திருச்சி, பிப். 25: திருச்சி திருவானைக்கோவில் நாலு கால் மண்டபம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் கோபி. இவரது கடையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் வேலை செய்து வந்தார். இவர் தனது அக்கா மகளான 22 வயது இளம்பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மனைவி மற்றும் அவரது குடும்பத்துடன் திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில் தெரு 4வது தெருவில் முதல் மாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பேக்கரி உரிமையாளர் கோபியின் உறவினர் மகன் துரைபாலன் (22). இவர் அடிக்கடி பேக்கரி வந்தபோது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவரது மனைவியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் பல மாதங்களாக நீடித்த நிலையில் சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர், மனைவியை கண்டித்தார். ஆனாலும், இளம்பெண் கேட்காததை அடுத்து வாலிபர் வேறு பேக்கரிக்கு வேலைக்கு மாறினார். அதன்பின்னரும் கள்ளக்காதல் நீடித்ததால், ஆத்திரமடைந்த வாலிபர், மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கொண்டு கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்றார். கள்ளக்காதலிலை பார்க்க தினமும் வந்த துரைபாலன் வீடு பூட்டப்பட்டிருப்பதால் மனவேதனை அடைந்தார். கள்ளக்காதலியை நேரில் வரவழைக்க வேண்டும், அல்லது அவர்களது சொந்த ஊரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கறிக்கடையில் ஆட்டு ரத்தம் வாங்கி கொண்டு கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தார். பால்கனி வழியே மாடிக்கு சென்ற துரைபாலன், பக்கவாட்டு படிக்கட்டு வழியே வீட்டின் பக்கம் சென்று கதவை திறந்தார். உள்ளே சென்ற துரைபாலன், ஹாலில் வாங்கி வந்த ஆட்டு ரத்தத்தை ஊற்றி மீண்டும் வந்த வழியே தப்பியோடினார்.

தொடர்ந்து பெரம்பலூரில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் தேவராஜூக்கு போன் செய்த துரைபாலன், திருவானைக்கோவிலில் உள்ள உங்கள் வீட்டில் மாடியில் குடியிருக்கும் குடும்பத்தினர் 4 பேரை மர்ம ஆசாமிகள் கொன்று விட்டதாக கூறினார். அதனை தொடர்ந்து உடனடியாக திருவானைக்கோவில் வந்த அவர் ரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து வந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவயிடம் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வடக்கு மாநகர துணை கமிஷனர் சக்திவேல் சம்பவயிடம் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் உடலை காணாததும் ரத்தம் மட்டும் இருப்பதால் போலீசார் திகைப்படைந்தனர்.

இந்நிலையில் துரைபாலனும் அங்கு சென்று தனக்கும் செல்போனில் தகவல் வந்ததாக கூறினார். போலீசார் சோதனை நடத்தியதில் அங்கிருந்தது ஆட்டு ரத்தம் என்பது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது துரைபாலன் கையில் கேரி பேக் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தானாக சிக்கிய துரைபாலனை பிடித்த போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதலியை கண்டுபிடிக்க அவர் நடத்திய நாடகம் என்பது தெரிய வந்தது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட போலீசார், துரைபாலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Rangoli ,Thiruvanaikoil ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்