மதுரை, பிப். 22: மதுரை புதுமண்டப கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றுவதை எதிர்த்த மனு ஐகோர்ட் கிளையில் முடித்து (பைசல்) வைக்கப்பட்டது. மதுரை புதுமண்டபம் வியாபாரிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் சங்க தலைவர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் சில ஆண்டுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், புது மண்டபம் பகுதியில் உள்ள கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வியாபாரிகளுக்கு குன்னத்தூர் சத்திரத்தில் கடைகள் கட்டுவதற்கு முடிவானது. இதன்படி, எங்கள் சங்கத்தினருக்கு 169 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில், முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால், கடைகளை காலி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படும் வரை எங்களை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி சி.சரவணன் நேற்று விசாரித்தார்.
கோயில் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘கடைகள் அனை த்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 14 புதிய கடைகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் பழைய கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன. பாக்கியுள்ள புதிய கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. மின் இணைப்பு கொடுக்க, கொடுக்க சம்பந்தப்பட்டவர்களின் பழைய கடைகள் காலி செய்யப்படும்’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்தார்.