×

மாசிமகத்தையொட்டி கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி

கடலூர், பிப். 17: மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் மாசி மக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் கடலில் நீராடினால் அவர்களின் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் கிடைக்கும் என மாசிமக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி மாசிமக விழாவான நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோயில்களில் இருந்து சாமிகளை வாகனங்களில் வைத்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்தனர்.

திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர், திருவந்திபுரம் செங்கமலத்தாயார் சமேத தேவநாதசுவாமிகள், வரதராஜ பெருமாள் வண்டிப்பாளையம் சுப்ரமணியசாமி, அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்டவரதராஜபெருமாள், செல்லங்குப்பம் பொட்லாயி அம்மன் மற்றும் கடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த சுவாமிகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.மாசிமகத்தையொட்டி மறைந்த முன்னோர்களுக்கு கடற்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில்வர் பீச் மற்றும் மகத்துப்பட்டறை பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் மைக் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.கடற்கரையில் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கடலோரத்தில் படகுகள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags : Tirthwari ,Samis ,
× RELATED தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக...