×

சுண்டமேட்டில் அங்கன்வாடி மையம் 41வது வார்டு திமுக வேட்பாளர் இல.பத்மநாபன் வாக்குறுதி

திருப்பூர், பிப்.12: சுண்டமேட்டில் குழந்தைகளின் வசதிக்காக அங்கன்வாடி மையம் அமைக்கப்படும் என, 41வது வார்டு திமுக வேட்பாளர் இல.பத்மநாபன், தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதியளித்தார். திருப்பூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன், 41வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், தோறும், சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார். அவரை பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள்.

தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று 41வது வார்டுக்கு உட்பட்ட சுண்டமேடு, மகாலட்சுமிநகர் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இல.பத்மநாபன் வாக்கு சேகரித்தார்.அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. திமுக அரசு வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. இதனால் தமிழகத்தில் நடைபெறுகிற நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும்.

எனவே வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது சுண்டமேடு பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குழந்தைகளின் வசதிக்காக அங்கன்வாடி மையம் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வாக்களித்து வெற்றி பெற செய்தால், சுண்டமேடு பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்படும் என இல.பத்மநாபன் வாக்குறுதியளித்தார்.

Tags : DMK ,Ila Padmanabhan ,Anganwadi Center ,Sundamet ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்