கருர், பிப்.9: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கரூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கரூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளரும், பட்டு வளர்ச்சித்துறை இயக்குநருமான சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாநகராட்சி மற்றும் புகளூர் நகராட்சியில் பார்வையிட்டு ஆவு செய்த தேர்தல் பார்வையாளர், அங்கு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறித்தும், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முறையாக எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள், வரப்பெற்றுள்ள புகார்கள், அந்த புகார்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது, மாநகராட்சிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான ரவிச்சந்திரன், புகளுர் நகராட்சிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கனிராஜ் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.