தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜ், தினசரி வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட ராஜாஜி சாலையில் நேற்று வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள், ‘‘திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காரணத்தால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தாம்பரம் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த பணிகள் வேகம் எடுத்துள்ளது.
ராஜாஜி சாலையில் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பின்னர் சரியாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதேபோல், பல சாலைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தாங்கள் வெற்றி பெற்றவுடன் இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்,’’ என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த காமராஜ், நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். வாக்கு சேகரிப்பின்போது பட்டுராஜா, கணபதி, மைக்கேல் ரவி, நியூட்டன், நாகேஸ்வரராவ், ரமேஷ், பாலா உட்பட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.