ஊட்டி: விடுமுறை நாளான நேற்று ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுற்றுலா பயணிகள் வருகை சுமாராகவே உள்ளது. பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வார இறுதி நாட்களில் சற்று கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான உறைபனி பொழிவு உள்ளது.
இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம், சூட்டிங்மட்டம் புல் மைதானம் மற்றும் மலை காய்கறி பயிர்கள் மீது உறைப்பனி கொட்டி வருகிறது. தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் உறைப்பனியால் பாதிக்காமல் இருக்கும் வகையில் தாகைகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. குளு குளு காலநிலை நிலவுவதால் இதனை அனுபவித்தபடியே பூங்காக்களை பார்த்து வருகின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் ரோஜா மலர்கள் வாடி உதிர்ந்து வருகின்றன. பெரும்பாலான செடிகளில் பூக்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இருப்பினும், ரோஜா பூங்காவிற்கு கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து மலர்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். விடுமுறை தினமான நேற்று ரோஜா பூங்காவில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.