×

குப்பாச்சிபட்டியில் அன்னை பராசக்தி  மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குளித்தலை, பிப்.7: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சிவாயம் கிராமம் குப்பாச்சி பட்டியில் அமைந்திருக்கும் விநாயகர், முருகன், மகாமாரியம்மன், பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த வியாழக்கிழமை ஊர் பொதுமக்கள் பக்தர்கள் காவிரி கடம்பன் துறையிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர். வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் அஸ்திர ஹோமத்துடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை விநாயகர் வழிபாடு பூர்ணாகுதி, உபசார பூஜைகள் நடைபெற்று இரண்டாம் கால பூஜை நிறைவுற்றது.

மாலை விக்னேஸ்வர பூஜை சோமகும்ப பூஜை வேதிகா அர்ச்சனை நடைபெற்று மூன்றாம் கால பூஜை நிறைவுற்றது. நேற்று காலை மங்கள இசைவுடன் விக்னேஸ்வர பூஜை பிம்ம சுத்தி நாடி சந்தானம் பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து பத்ரா தானம் கடம் புறப்பாடு செய்து கோயிலை வலம் வந்து விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் கண்ணதாசன், ஊர் நாட்டாமை சுப்பாரெட்டியார், விஜயகுமார், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் கவிதா கோவிந்தராஜ், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் தர்மலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி ராஜாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா இளங்குமரன் உள்பட பலர் முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்து சென்றனர்.

Tags : Maha Mariamman Temple ,Kuppachipatti ,
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்