×

பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் 6ம் தேதி மகா கும்பாபிஷேக விழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை

* உள்ளூரில் 5 ஆயிரம் பேர் வரை அனுமதி
* ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, பிப்.3: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் வரும் 6ம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என ஆய்வுக்கூட்டத்தில் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார். பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, மகா கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பிரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், ஏடிஎஸ்பி ரமேஷ்பாபு, ஆரணி ஆர்டிஓ கவிதா, ஊராட்சி உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்ததாவது: படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். எனவே, கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், கூட்ட நெரிசல் ஏற்படும். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, படவேடு பகுதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்களை மட்டும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அதிகபட்சம் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதற்கான அனுமதி சீட்டு, ரேணுகாம்பாள் அம்மன் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திலும், திருவண்ணாமலையில் உள்ள அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலும் வழங்கப்படும்.

ேமலும், அனுமதிக்கப்படும் பக்தர்களும் ஒரே பகுதியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, கோயிலை சுற்றிலும் பக்தர்கள் பரவலாக நின்று தரிசிக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டும். உள்ளூர் பக்தர்கள் என்பதற்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணங்களை அளித்து, கும்பாபிஷேக தரிசனத்துக்கான அனுமதி சீட்டு பெறலாம். வெளியூர் பக்தர்கள் வருகையை தவிர்க்க, படவேடு செல்லும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வெளியூர் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. அதேபோல், சிறப்பு பஸ்களை இயக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Maha ,Kumbabhishekam ,Padavedu Renukampal Temple ,
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்