தூத்துக்குடி, பிப். 3: தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தலுக்காக பல்வேறு ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்களாக 40 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் அதுல்ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நாளை (4ம் தேதி) தூத்துக்குடி வருகிறார். தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அவருக்கான தொடர்பு செல்போன் எண் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் தொடர்பான புகார்கள், தகவல்களை அவரிடம் தெரிவிக்கலாம்.