ஊட்டி: சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 2ம் தேதி உலக சதுப்பு நில தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஊட்டியில் சைக்கிள் பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட எஸ்பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி ஊட்டி அருகே மார்லிமந்து அணை அருகே நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற மாணவர்கள் சதுப்பு நிலம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை இணைய வழியாக நடந்த புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.