ஸ்ரீவைகுண்டம், ஜன. 29: ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவ திருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் சுவாமி கோயிலில் மூலவர் அவதார தின விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 9 மணிக்கு மூலவர் சுவாமி வைகுண்டநாதனுக்கு பால் திருமஞ்சனம், தீபாராதணை நடந்தது. காலை 11 மணிக்கு உற்சவர் ஸ்ரீகள்ளப்பிரான் சுவாமி, தாயார்கள் தேவி, பூதேவியுடன் தங்கமசகிரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்யபிரபந்த சேவை கோஷ்டி நடைபெற்றது.
ஸ்ரீகள்ளப்பிரான் சுவாமி தோளிக்கினியானில் எழுந்தருளி அமர்ந்தும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி கோகுலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, ஸ்லத்தார்கள் ஸ்ரீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுஜம், சீனு மற்றும் உபயதாரர் வக்கீல் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.