×

சாமிதோப்பில் தைத் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி, ஜன. 25:சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து பதினொரு நாட்கள் நடைபெற்றது. விழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

 தேரோட்ட நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார், குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவா அரகரா என்ற பக்தி கோஷமிட்டவாறு தேர் வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகளும் மேளதாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது. இதில் திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன், ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அழகேசன், கரும்பாட்டூர் ஊராட்சி தலைவர் தங்கமலர் சிவபெருமான், பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், பாபு, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரவணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சாமிதோப்பு சம்பத், ஜெனித்பாபு, சாமிசெல்வன் அய்யா வழி மகளிர் சான்றோர் குழு நிர்வாகிகள் ராஜலட்சுமி, செல்வராணி, சந்திரலேகா, மகாலெட்சுமி, நிஷா, நாடார் பேரவை நிர்வாகி சுபாஷ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்குரதவீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப் பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவைகளை அடங்கிய பொருள்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடைபெற்றது. பின்னர் 6 மணியளவில் திருத்தேர் நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருத்தேர் பணிவிடைகளை குருமார்கள் ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், பையன் நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தலைமைப்பதியின் கிழக்கு வாசல் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம் இலவச உணவு வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும்  நடந்தது.

Tags : Thai Festival ,Samitop ,
× RELATED சாமிதோப்பில் தை திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்