கடலூர், ஜன. 22: கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி
கணேசன், பெண்களின் நலன் காக்க லேடிஸ் பஸ்ட் மற்றும் முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் என்ற புதிய காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தினார். இந்த காவல் உதவி எண்களுக்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிதம்பரத்தை சேர்ந்த பட்டாபிராமன் (73) என்பவர், ரங்கநாதன் என்பவர் தன்னிடம் ரூ.5,50,000 பணம் கடனாக பெற்றுக்கொண்டு திருப்பி தர மறுப்பதாக புகார் தெரிவித்ததின்பேரில், சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை மேற்கொண்டு சிஎஸ்ஆர் பதிவு செய்தும், இருவருக்கும் இடையே சுமூகமான முடிவு எட்டப்படாததால், பணம் கொடுத்ததற்கான உறுதிமொழி பத்திரத்தை கொண்டு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்றுக் கொள்ளும்படி இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டு எழுதி வாங்கப்பட்டுள்ளது.
நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்த ஜெகநாதன் (70) என்பவர், தனது மகன் செந்தில்குமார் குடிப்பதற்கு பணம் கேட்டு தன்னை மிரட்டுவதாகவும் அடிக்கடி பிரச்னை செய்வதாகவும் புகார் தெரிவித்ததின்பேரில் நெய்வேலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் இருவரையும் அழைத்து விசாரித்து இனிமேல் எந்த ஒரு பிரச்னையும் செய்யக்கூடாது என்று செந்தில்குமாரை கடுமையாக எச்சரித்து, அவருக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, இனி எந்த ஒரு பிரச்னையும் செய்யமாட்டேன் என்று அவரிடம் எழுதி வாங்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.