தேவாரம், ஜன. 20: தேவாரம் மலையடிவாரத்தில் அவரை சாகுபடி விவசாயம் நல்ல முறையில் நடக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர். தேனி மாவட்டத்தில், தேவாரம், கோம்பை, கம்பம், உள்ளிட்ட ஊர்களில் சுமார், 150 ஏக்கர் பரப்பில் அவரை சாகுபடி நடக்கிறது. இங்கு விளையும், அவரைக்காய் பறிக்கப்பட்டு, தேனி, மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதால், மோட்டார் பம்ப் செட்களில் தண்ணீர் அதிகமாக வருகிறது. இதனால் அவரை சாகுபடியில் மிக தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘அவரை சாகுபடி மலையடிவார நிலங்களில் பச்சை பசேலென காட்சி தருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கோடை காலங்களில் அதிகமான அளவில் விவசாயம் செய்ய முடியும். அவரை விளைச்சல் இந்தாண்டு அமோகமாக இருக்கும்,’’ என்றனர்