காரைக்கால், ஜன.20: திருநள்ளாறு கோயிலில் எம்எல்ஏ., சிவா எதிரிலேயே அவரது ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருநள்ளாறு பிடாரி கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி(41), டிரைவர். திருநள்ளாறில் நேற்று முன்தினம் பிடாரி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு கோபி தனது நண்பர்களுடன் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார். அதில் கலந்துகொள்வதற்காக திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ., சிவா வந்தார். எம்எல்ஏ., வந்த நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(33) என்பவர் கோயிலுக்கு வந்த அனைவரையும் திட்டிக்கொண்டிருந்தார்.
‘எம்.எல்.ஏ வந்திருப்பதால் அமைதி காக்கும்படியும், எதுவாக இருந்தாலும் அவர் சென்றபின் பேசிக் கொள்ளலாம்’ என்றும் நாகராஜிடம், கோபி தெரிவித்தார். இதனால் நாகராஜ் ஆவேசமாக கோபியைத் திட்டி, அவரது கன்னத்தில் அறைந்தார். எதிர்பாராதவிதமாக தனது ஆதரவாளரை நாகராஜ் தாக்கியதால் எம்எல்ஏ., சிவா அதிர்ச்சியடைந்தார். கோயில் விழாவில் எம்எல்ஏ எதிரில் அவரது ஆதரவாளரை தாக்கிய சம்பவம் திருநள்ளாறு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இது குறித்து கோபி திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த ஆய்வாளர் லெனின்பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நாகராஜை தேடி வருகின்றனர்.