×

திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலில் தைப்பூச விழா தேரோட்டம்

கும்பகோணம், ஜன.20: கும்பகோணம் அருகே திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு இவ்விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வார் அச்சிட்ட கொடியை மங்கள வாத்தியம் முழங்க பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது. அப்போது கொடிமரம் அருகே சாரநாயகி தாயாருடன் சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ள கோயில் விழாக்களில் பெருமாளும் தாயாரும் படிச்சட்டங்களில் கோயிலின் உட்பிரகாரத்தில் தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் புறப்பாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று நிலைத் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.இதனைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு உற்சவப் பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Thaipusam ,Tirucherai Saranathaperumal temple ,
× RELATED தமிழக கோவில்களும் வழிபாடு முறைகளும்!!!