நெல்லை, ஜன. 12: ஊரடங்கு நேரங்களில் பாதுகாப்பாகவும், விழிப்போடும் இருந்து கொரோனாவை பரவலைத் தடுக்குமாறு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களை ரூபி மனோகரன் எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனாவை விரட்ட ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பாகவும், விலகி இருப்பதன் மூலமும் மட்டுமே இந்த கொடிய நோயை விரட்ட முடியும். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து இரவுநேர ஊரடங்கும், அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழுநேர ஊரடங்கும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்கள் அனைவரும் கொரோனா நோய் பரவல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வேலைகளை சமூக இடைவெளியுடன் மேற்கொள்ளுங்கள். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள். ஊரடங்கு நேரத்தில், அத்தியாவசியத் தேவை எனில் மட்டுமே வெளியில் வாருங்கள். முடிந்தவரை, ஊரடங்கு காலத்தில் விலகி இருங்கள். அதேநேரம், விழிப்போடு இருங்கள். இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு கால கட்டுப்பாடுகளை சரியாகக் கடைப்பிடித்து, கொரோனா நோய் பரவலில் இருந்து நம் தொகுதியையும், நாட்டையும் பாதுகாப்போம். இவ்வாறு ரூபி மனோகரன் எம்எல்ஏ கூறியுள்ளார்.